இந்தியா

பசுவதை விவகாரம்.. கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் சித்தராமையா பதில்

Published On 2023-06-06 09:57 GMT   |   Update On 2023-06-06 11:30 GMT
  • கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது.
  • வயதான பசுக்களை வெட்டுவது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் கால்நடைகளை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளை மட்டுமே வதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வெங்கடேஷ், பசு வதை தொடர்பாக கூறிய கருத்து மாநிலத்தில் போராட்டத்தை தூண்டி உள்ளது. எருமை மாடுகளை வெட்டலாம் என்றால் பசுக்களை ஏன் வெட்டக்கூடாது? என அவர் பேசியிருந்தார்.

'முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாவில், எருமை மாடுகளை வெட்ட அனுமதித்துள்ளனர். ஆனால் பசு வதை செய்யக்கூடாது என கூறியுள்ளனர். அதுபற்றி விவாதித்து முடிவு எடுப்போம். வயதான பசுக்களை வெட்டுவது, அந்த கால்நடைகளை நிர்வகிப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்' என்றும் அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், கடந்த இரு தினங்களாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தில் தெளிவு இல்லை என்றும், அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News