இந்தியா

ஆம்னி பேருந்து தீ விபத்து- ஆந்திரா அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2025-10-24 14:48 IST   |   Update On 2025-10-24 14:48:00 IST
  • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
  • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News