ஓமன் சுல்தான் இந்தியா வருகை: ராஜ்பவனில் உற்சாக வரவேற்பு அளித்த ஜனாதிபதி, பிரதமர்
- ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.
- ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.
புதுடெல்லி:
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
வரலாறு, கலாசாரம், பொருளாதாரம் ரீதியாக ஓமன்- இந்தியா ஆகிய இருநாடுகளிடையே நீண்டகால நட்புறவு உண்டு. இரு நாட்டு மக்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நேரடி தொடர்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், ராஜ்பவன் வந்தடைந்த ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முறைப்படியான வரவேற்பை அளித்தனர்.
ஓமன் சுல்தானின் இந்திய சுற்றுப்பயணமானது இரு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிகோலும்.
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். அவரது சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.