'இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம்' - மோகன் பகவத்
- மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது.
- நான்காவது வகை "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்"
மும்பையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா ஒன்றில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் நான்கு வகை என்றும், இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர்,
'இந்துத்துவாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். உங்கள் மத நடைமுறையையோ அல்லது உங்கள் மொழியையோ. இந்துத்துவா உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இந்துக்களில் நான்கு வகையினர் உள்ளனர். முதலாவது, பெருமையுடன் நாங்கள் இந்துக்கள் எனக்கூறுவார்கள். இரண்டாவது பிரிவில், "நாங்கள் இந்துக்கள், அதனால் என்ன? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?" என்று கூறுபவர்கள். மூன்றாவது பிரிவில், "வீட்டிற்குள் மட்டும் இந்துக்கள்" என்று கூறுபவர்கள்.
நான்காவது "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்" அடங்குவர். மேலும் அதிகமான மக்களை மறக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன'. என்று கூறினார். மேலும் இந்து பாவம் அல்லது இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
"மதத்தின் காரணமாகப் பிரிவினை ஏற்பட்டது. நாங்கள் இந்துக்கள் என்பதால் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று சொன்னோம். இது தவறு என்று கூறும் மக்கள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் இந்தியாவில் உள்ளன. மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது. 'இந்து பவ் கா விஸ்மரன்' என்பது இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்தது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேச வன்முறைகள் தொடர்பாக பேசியவர், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள 1.25 கோடி இந்துக்கள் அங்கேயே இருந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடிவு செய்தால், அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் பாடகர் அட்னான் சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.