இந்தியா

லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது - பிரசார் பாரதி முன்னாள் தலைவர்

Published On 2024-04-20 09:53 GMT   |   Update On 2024-04-20 09:53 GMT
  • டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
  • பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்

பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News