இந்தியா

குற்ற தலைநகராக மாறிய பீகார்: நிதிஷ்குமாரை சாடிய ராகுல் காந்தி

Published On 2025-06-07 02:25 IST   |   Update On 2025-06-07 02:25:00 IST
  • சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன.
  • ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி.

பாட்னா:

பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதியின் பூமியாக பீகார் இருந்தது. இன்று இந்தியாவின் குற்ற தலைநகராக மாறிவிட்டது.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒருபோதும் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தாது. அவர்கள் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியலும் முடிவுக்கு வரும்.

சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி. பா.ஜ.க. மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளைத் தீர்மானிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இல்லை.

தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு சாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எங்கு ஆட்சி அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News