மின்சார ரெயிலில் 23 ஆண்டுகளாக ஓசிப்பயணம் செய்தவர் பிடிபட்டார்
- தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
- ஓசிப்பயணம் செய்பவர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மும்பை :
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது டிக்கெட் இன்றி ரெயிலில் வந்த ஒரு பயணி ரெயில்வே ஊழியர் என கூறி அடையாள அட்டையை காட்டினார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரது அடையாள அட்டையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அந்த பயணியை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் போலி ரெயில்வே ஊழியர் அடையாள அட்டையுடன் சிக்கியவர் பரேஷ் பட்டேல் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர் என கூறி மின்சார ரெயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் பரேஷ் பட்டேலை கைது செய்தனர்.