இலவச திட்டங்களை நிறைவேற்ற மின் கட்டணம் உயர்வு: குமாரசாமி குற்றச்சாட்டு
- மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும்.
பெங்களூரு :
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. அதுவும் மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது.
இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும். மாநிலத்தில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார்கள்.
பா.ஜனதாவினர் நாங்கள் ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தான் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக நாடகமாடுகிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னை நிதி மந்திரி என்று கூறிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து புரிந்து கொள்ள முடியவில்லையா?.
சிறு தொழில் நிறுவன அதிபர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இலவச வாக்குறுதி அளித்துவிட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.