SIR-க்கு எதிராக கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
- SIR தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
- தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கேரள மாநில சட்டசபையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி எம்.எல்.ஏ.-க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிகையில் "SIR-ஐ செயல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த அவசர நடவடிக்கை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
SIR நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை எந்தவித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டது. தேசிய அளவில் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும், பீகார் மாநில SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் SIRஐ செயல்படுத்த இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.