நான் தவறு செய்துவிட்டேன்: ராகுல் காந்தி சொன்ன காரணம் இதுதான்
- சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
- இதில் நான் தவறிழைத்து விட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடந்த ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்த்து சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது, நான் எங்கெல்லாம் சரியாகச் செய்தேன், எங்கெல்லாம் தவறவிட்டேன் என்பதைப் பார்க்கிறேன்.
தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை நான் சரியாகச் செயல்பட்டேன். எனவே, நான் அதில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.
எனது செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு விஷயத்தில் எனக்கு குறை இருக்கிறது. நான் தவறு செய்துள்ளேன். ஓபிசி பிரிவை பாதுகாக்க வேண்டிய விதித்தில் நான் பாதுகாக்கவில்லை என்பதை தெளிவாகக் காண்கிறேன்.
தலித் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டேன். அதேபோல், பழங்குடியினரின் பிரச்சினைகளையும் ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஓபிசி மக்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ஓபிசி பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி எனக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பை நானே செய்திருப்பேன். அதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இது என்னுடைய தவறு.
தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு தெலங்கானா மாநிலம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என தெரிவித்தார்.