குருவாயூர் கோவில் புதிய மேல்சாந்தியாக யூ டியூப்பில் பிரபலமான ஆயுர்வேத டாக்டர் நியமனம்
- கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டது கேரளாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- எனது நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் வெளியிடவும் திட்டம் உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிரண் ஆனந்த் (வயது 34) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
கிரண் ஆனந்த் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசி. இவர்கள் இருவரும் ரஷியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அப்போது ஆயுர்வேதம் மற்றும் இசை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு வந்தனர். சுமார் 179 வீடியோக்கள் வரை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளனர்.
இவர்களின் யூ டியூப் வீடியோக்களுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவர்களின் ரசிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டது கேரளாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுபற்றி கிரண் ஆனந்த் கூறியதாவது:-
நான் குருவாயூர் கோவிலுக்கான பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இக்கோவிலில் வழிபாடுகள் நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு பூஜைகள் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே அவருக்கு உதவி செய்யவே நான் இங்கு வந்தேன். இப்போது எனக்கு கோவிலின் மேல் சாந்தி பொறுப்பு கிடைத்துள்ளது. இதனை எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன். இப்பணியில் ஈடுபடுவதன் மூலம் இறைவனுக்கு செய்யும் சேவையில் மேலும் ஒருபடி உயரும் என நம்புகிறேன்.
கோவில் பணிகளில் ஈடுபட்டாலும் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இசை குறித்தும், கலை இலக்கியம் மற்றும் ஆயுர்வேதம் பற்றியும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுவேன்.
எனது நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் வெளியிடவும் திட்டம் உள்ளது. மேல் சாந்தி பதவி காலம் முடிந்ததும் குருவாயூரில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.