அமர்நாத் யாத்திரை குழுவை கொடியசைத்து தொடங்கி வைத்தார் காஷ்மீர் கவர்னர்
- அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
- கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நாளை தொடங்குகிறது.
ஆகஸ்டு 11-ந்தேதி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்கம் மற்றும் பல்டால் முகாம்களில் புனித யாத்திரை தொடங்குகிறது.
இந்த நிலையில் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் குழுவின் முதல் பகுதியை இன்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்ரீகர்கள் குழு பலத்த பாதுகாப்புடன் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காஷ்மீரில் உள்ள முகாம்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜம்மு மேயர் சந்தர்மோகன்குப்தா, பா.ஜனதா தலைவர் தேவேந்தர நாரானா, தலைமை செயலாளர் அருண்குமார் மேத்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.