சபரிமலை கோவில் தங்கம் மாயமான வழக்கு: TDB முன்னாள் தலைவர் கைது
- தங்கம் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளி உன்னிகிருஷ்ணன் போட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் தலைவரான வாசு, இரண்டு முறை ஆணையராகவும் இருந்துள்ளார்.
சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
தங்கம் மாயமான வழக்கில் முக்கியமான குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போட்டி மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரான என். வாசு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இரண்டு முறை இந்த போர்டின் ஆணையகராகவும் பணியாற்றியுள்ளார்.
வாசு, மாநில அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரிய பதவி வகித்த நபர் இவர் ஆவார். போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.