இந்திய வரலாற்றில் முதல் முறை.. மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு காலக்கெடு - உச்சநீதிமன்றம் அதிரடி
- ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்தனர்.
- அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவும் நிர்ணயித்தனர். இந்த தீர்ப்பு தொடர்பான முழு விவரமும் இன்று வெளியாகியது.
இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பு விவரத்தில், "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றில் நாட்டின் ஜனாதிபதியின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கட்டளையிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.