இந்தியா

இந்து மத துறவி கைது துரதிர்ஷ்டவசமானது: இந்திய வெளியுறவுத்துறை

Published On 2024-11-26 15:18 IST   |   Update On 2024-11-26 15:18:00 IST
  • இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
  • இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

இஸ்கான் அமைப்பு தலைவர் கைது விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கவனத்தில் கொண்டு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்து துறவியின் கைது மற்றும் ஜாமீன் மறுப்பு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், திருட்டு மற்றும் நாசப்படுத்துதல் மற்றும் தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்தச் சம்பவங்களை செய்தவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அமைதியான கூட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் மதத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News