இந்தியா

கோவிலில் ஆக்ரோஷமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய யானை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காட்சி.

கோவில் திருவிழாவில் பாகனை கீழே தள்ளிவிட்டு ஆக்ரோஷமாக ஓடிய யானை- பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2026-02-09 14:53 IST   |   Update On 2026-02-09 14:53:00 IST
  • கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
  • யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

கேரள மாநிலத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதால், சில நேரங்களில் பிரச்சனை ஆகி விடுகிறது.

இதனால் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளின் படியே, கேரளாவில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொச்சி அருகே கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, திடீரென பாகனை தள்ளிவிட்டு அதிவேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திரிபுனித்து ராவில் பூர்ணத்ரயீசர் கோவில் இருக்கிறது. கேளர மாநிலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு விஷ்ணு அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இதனால் அவற்றில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூர்ணத்ரயீசர் யானைகளை விரும்பும் கடவுளாக கருதப்படுவதால், இந்த கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.

இந்தநிலையில் பூர்ணத்ர யீசர் கோவில் திருவிழாவிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னி கிருஷ்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அத்தாழ சீவேலிக்கான கோபுர நுழைவு வாயிலின் அருகே அழைத்துவரப்பட்ட போது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.

இதையடுத்து அந்த யானை, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே விழச்செய்துவிட்டு ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடியது. அந்த யானை கோவில் வளாகத்தை சுற்றி வேகமாக ஓடியபடி இருந்தது. இதனை கோவிலில் இருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் கோவில் வளாகத்தில் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த யானை கோவிலின் மேடைக்கு அருகே நின்றது. ஆனால் ஆக்ரோஷம் தனியாமல் தலையை வேகமாக அசைத்த படி நின்றது.

இதையடுத்து கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

பல்லுருடடி அழகிய காவு கோவிலில் இருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு யானையை சாந்தப்படுத்தி அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். பின்பு அந்த யானை கோவிலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே கோவிலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News