இந்தியா

வானில் நடக்கும் அதிசயம்: 17-ந்தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்

Published On 2026-02-09 12:46 IST   |   Update On 2026-02-09 12:46:00 IST
  • பகல் நேர ஒளி தொடர்ந்தே இருக்கும்.
  • இந்த அற்புதமான வளையக் காட்சியின் உச்சத்தை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம்.

புதுடெல்லி:

சூரிய கிரகணங்கள் வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை. இவை கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சந்திரன் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைத்து ஒருநிழலை உருவாக்குகிறது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசை நாளான வருகிற 17-ந்தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும். இந்த வளைய சூரிய கிரகணம் "நெருப்பு வளையம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது. காரணம், சந்திரன் சூரியனின் முன் வந்து அதன் மையப் பகுதியை மறைக்கும் போது, சூரியன் முழுமையாக மறையாமல், சந்திரனைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தென்படும்.

இந்த நிகழ்வின்போது முழு சூரிய கிரகணத்தை போல வானம் முற்றிலும் இருளடையாது. பகல் நேர ஒளி தொடர்ந்தே இருக்கும். ஆனால் சூரியன் ஒரு ஒளிரும் வளையமாக சந்திரனைச் சுற்றி தெரியும். இந்த காட்சி அழகை மட்டுமல்லாமல், சூரியனின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆய்வு செய்யும் வானிய லாளர்களுக்கும் அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த அற்புதமான வளையக் காட்சியின் உச்சத்தை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம். இது தென் ஆப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் தெரியும். கான் கார்டியா போன்ற ஆய்வு நிலையங்களில் பணிபுரியும் ஒரு சில விஞ்ஞானிகள் மற்றும் தென் பெருங்கடலில் சாகசப் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே இந்த முழு வளையத்தையும் நேரில் காண முடியும்.

தென் அமெரிக்காவின் தெற்கு முனைகள், தெற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள் மற்றும் தென் கடல்க ளில் வசிக்கும் மக்களுக்கு, சூரியன் பாதியிலேயே மறைந்து, 'கடித்த ஆரஞ்சு பழம்' போலக் காட்சியளிக்கும் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.

இந்தச் சூரிய கிரகணங்கள், 400 மடங்கு பெரிய சூரியன், 400 மடங்கு தொலைவில் இருப்பதால், சந்திரன் மற்றும் சூரியன் எவ்வளவு துல்லியமாக வரிசையாக உள்ளன என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு வானியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியாது என்றாலும், இது சிறு தாக்கத்தை உண்டாக்கும்.

Tags:    

Similar News