கர்நாடகாவில் தனியார் விமானம் விழுந்து விபத்து.. இருவர் காயம்!
- 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம்
- எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து எனத் தகவல்
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பபலேஷ்வர் தாலுகாவிற்குட்பட்ட மங்களூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயிற்சியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி மட்டும் இருந்துள்ளனர். விமானம் விழுவதற்கு முன்பாகவே இருவரும் அதிலிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருப்பினும், இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம் என கூறப்படுகிறது. கல்புர்கியில் இருந்து பெலகாவி நோக்கிச் சென்றபோது, எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.