இந்தியா

நான் பேசுவதை கேட்டுத்தான் பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்

Published On 2026-02-09 15:37 IST   |   Update On 2026-02-09 15:37:00 IST
  • மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க திட்டம் என சபாநாயகர் குற்றச்சாட்டு.
  • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சீன விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.

இதற்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல் என்ற கேள்விக்குகே இடமில்லை. உண்மை என்னவென்றால் மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார்" என்றார்.

Tags:    

Similar News