பொது நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பக்கூடாது... மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு!
- மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
- இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல்
PM CARES, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகிய குறிப்பிட்ட மூன்று நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திற்குத் தெரிவித்துள்ளது.
இதற்கு இவை அரசு நிதி அல்ல என விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த நிதிகள் அனைத்தும் மக்களின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இவை இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளது.
இதற்கு பிரதமர் அலுவலகம் இரண்டு விதிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.
- விதி 41(2)(viii): நாடாளுமன்றக் கேள்விகள் இந்திய அரசின் நேரடிக் கவலைக்குரிய (primarily the concern of the Government) விஷயமாக இருக்க வேண்டும்.
- விதி 41(2)(xvii): இந்திய அரசுக்கு நேரடியாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பக்கூடாது. என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிதிகள் பொது தொண்டு அறக்கட்டளையாக (Public Charitable Trust) பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில்,
"பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) குறித்த கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது."
இந்த உத்தரவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து நேரடியாக மக்களவை செயலகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் இந்த நிதிகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது:
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அப்படியிருக்கையில் பொதுநலன் சார்ந்த கேள்விகளைக் கேட்பதிலிருந்து அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்?
- மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
- ஆயிரக்கணக்கான கோடி பொதுப் பணம் குறித்த கேள்விகளை ஏன் முடக்க வேண்டும்?
- மக்களிடமிருந்து அரசு எதைமறைக்க முயல்கிறது?
- இனி நாடாளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது மோடியின் உத்தரவுகளின்படி செயல்படுமா?
இது வெளிப்படைத்தன்மை அல்ல.
இது சர்வாதிகாரக் கட்டுப்பாடு.
இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். " எனக் குறிப்பிட்டுள்ளது.