மகாராஷ்டிராவில் நடப்பது 'ஏக் துஜே கேலியே' அரசு: சுப்ரியா சுலே எம்.பி. விமர்சனம்
- புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது.
- மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
மும்பை :
மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 30-ந் தேதி பதவி ஏற்றனர். எனினும் பதவி ஏற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில் ஷிண்டே, பட்னாவிஸ் அரசை 'ஏக் துஜே கேலியே' அரசு என பா.ஜனதா எம்.பி. ஒருவரே வர்ணித்ததாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " இன்று பா.ஜனதா எம்.பி. ஒருவருடன் பேசினேன். அப்போது அவர் ஷிண்டே - பட்னாவிஸ் அரசை, 'ஏக் துஜே கேலியே' அரசு என கூறினார். இதுபோல நான் ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு மந்திரிகள் இருந்தனர். அவர்கள் மூலமாக நாங்கள் அந்த பகுதி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வந்தோம். தற்போது புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது. மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்" என்றார்.
'ஏக் துஜே கேலியே' இந்தியில் மெகாஹிட்டான காதல் படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.