இந்தியா

மாநிலங்களவையில் டெல்லி அரசு நிர்வாக மசோதா: காங்கிரஸ், ஆம் ஆத்மி எம்.பி.களுக்கு கொறடா உத்தரவு

Published On 2023-08-07 09:44 IST   |   Update On 2023-08-07 09:44:00 IST
  • அவை ஒத்திவைக்கும் வரை உறுப்பினர்கள், அங்கேயே இருக்க உத்தரவு
  • பா.ஜனதா கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதர்வு

நிர்வாகத்தில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநகருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.

உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு டெல்லி அரசுக்கு முட்டுக்கட்டை போட்டது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையில் எப்படியாவது தோற்கடித்துவிட கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டார். இதனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கட்டாயம் எதிர்க்கும்.

இதனால் காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் தங்களுடைய எம்.பி.க்கள் தவறாமல் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமை கொறடா ''இன்று நடைபெறும் அவைக் கூட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவை ஒத்திவைக்கும் வரை, அவையில் இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.களுக்கும் கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 100 எம்.பி.க்களுக்கு மேல் உள்ளனர். ஏற்கனவே பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 238 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு போதுமான எண்ணிக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News