இந்தியா

டெல்லி கார் வெடிப்பு - 10 பேர் கொண்ட குழுவை அமைத்த என்.ஐ.ஏ.

Published On 2025-11-12 11:34 IST   |   Update On 2025-11-12 11:34:00 IST
  • காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. டிஜி மற்றும் ஐபி தலைவர் இன்று கூடுகின்றனர்.

டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.

இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.

உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி.க்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, என்ஐஏ ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் செயல்படும்.

இன்று, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் அரியானா காவல்துறையினரிடமிருந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்களையும் என்.ஐ.ஏ. கைப்பற்றும்.

கூடுதலாக, இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. DG மற்றும் IB தலைவர் இன்று கூடுகின்றனர்.

Tags:    

Similar News