இந்தியா

கச்சா எண்ணெய் விவகாரம்: நேட்டோ அமைப்பின் எச்சரிக்கையை நிராகரித்தது இந்தியா

Published On 2025-07-18 01:20 IST   |   Update On 2025-07-18 01:20:00 IST
  • இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்தார்.
  • ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்றார்.

புதுடெல்லி:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்தப் போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன.

இதற்கிடையே, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை எடுக்க ரஷியா தீவிரமாக மறுக்கிறது. நீங்கள் ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும். 100 சதவீத பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் தற்போதைய சந்தை சூழ்நிலை மற்றும் புவிசார் அரசியல் நிலைகளைப் பொறுத்தது. இந்த விஷயம் குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்துள்ளோம். அதில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வது இந்தியாவுக்கு ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த முயற்சியில் சந்தைகளில் கிடைப்பதாலும், உலகளாவிய சூழ்நிலைகளைப் பொறுத்தும் நாம் வழிநடத்தப் படுகிறோம். இந்த விஷயத்தில் இரட்டை வேடம் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News