வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு: 3 முக்கிய அம்சங்களை சொல்லி இடைக்கால தடைவிதிக்க வாய்ப்பு- இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை
- கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
- 6 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி வக்பு சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத் திருத்தம் கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, ஓவைசி கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 மாநில அரசுகள் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா போன்ற அமைப்புகளும் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டுமா அல்லது ஐகோர்ட்டுகளுக்கு அனுப்பலாமா? என்பது குறித்து மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டார்.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறியிருப்பது அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவை மீறும் செயல்" என வாதாடினார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரை உறுப்பினராக நியமிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக சேர அனுமதிப்பீர்களா" என கேள்வி எழுப்பினார்.
இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பக் கூடாது என மனுதாரர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். மேலும் புதிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "வக்பு திருத்த மசோதா பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை அளித்தது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது" என்றார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை வக்பு என அறிவித்ததும், அதை வக்பு வாரியம் கையகப்படுத்தி வேறு விதமாக அறிவிக்கிறது என்று மேத்தா கூறுகிறார்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மேத்தா, "ஒருவருக்கு வக்பு இருந்தால், அதை அறக்கட்டளையாக மாற்ற முடியும். அதற்கான வழிவகை உள்ளது" என்றார். அப்போது, "கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது" என தலைமை நீதிபதி கூறினார்.
இறுதியில், 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
முதலாவதாக, எந்த ஒரு சொத்தும் பயனாளரால் அல்லது கோர்ட்டால் வக்பு என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கூடாது.
இரண்டாவதாக, பிரச்சினைக்குரிய சொத்து தொடர்பான விசாரணையை மாவட்ட கலெக்டர் தொடரலாம். ஆனால் புதிய சட்டத்தில் உள்ள பிரிவு பொருந்தாது.
மூன்றாவதாக, வக்பு வாரியத்தின் அலுவல் வழி உறுப்பினர் பிற மதத்தவராக இருக்கலாம், ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கேட்டனர்.
அப்போது, கூடுதலாக 30 நிமிடம் தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (இன்று) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது 3 முக்கிய அம்சங்கள் மீது நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.