ரெயில் கழிவறை குப்பைத் தொட்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் உடல் - மும்பையில் அதிர்ச்சி
- ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
- இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
மகாராஷ்டிராவின் மும்பையில் ரெயில் குப்பைத் தொட்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் ரெயில் முனையத்திற்கு வந்து சேர்ந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த காணாமல் போனோர் புகார்களை ஆய்வு செய்தபோது, இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தனது உறவினர் விகாஸ் ஷா வெள்ளிக்கிழமை இரவு தனது மகனைக் கடத்திச் சென்றதாகக் தாய் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.