இந்தியா

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் வன்முறை- போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பு

Published On 2022-09-13 15:06 GMT   |   Update On 2022-09-13 15:06 GMT
  • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது
  • தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

வன்முறையின்போது போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News