ரெயில்வே தண்டவாளத்தில் பாய்ந்த காரை மீட்ட காட்சி.
கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார் தண்டவாளத்தில் பாய்ந்தது: ரெயில் நடு வழியில் நிறுத்தம்
- செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
- 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய்.
இவர் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து வைக்கப்பட்டது.
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். மதுபோதையில் இருந்ததால் அவரது வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என தெரியவில்லை.
இதனால் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
பின்னர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஓட்டிச் சென்ற கார் ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றது.
அப்போது அந்த வழியாக ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை கண்ட லோகோ பைலட் அவசர கால பிரேகை பயன்படுத்தினார்.
காருக்கு அருகே 5 மீட்டர் தொலைவில் ரெயில் நின்றது. ரெயில் கார் மீது மோதி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரெயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அந்த மார்க்கத்தில் 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
ஆதர்ஷ் ராய் கூகுள் மேப்பில் தனது முழு முகவரியை பதிவு செய்யாமல் நகரத்தின் பெயரை மட்டும் பதிவு செய்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.