ரெயிலில் பிச்சை எடுத்த இளம்பெண்ணுக்கு ஆதரவு அளித்து திருமணம் செய்த பீகார் இளைஞர்
- அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
- இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.
அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.
அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.