மாரத்தான் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் சந்திரபாபு நாயுடு
- சந்திரபாபு நாயுடு நேற்று காலை சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்
- போலீசார் அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு மனைவி நாரா புவனேஸ்வரி ஏற்கனவே நீதிமன்றத்தில் தயாராக இருப்பதாகவும், வழக்கறிஞர்களும் தயாராக இருப்பதாகவும் தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பட்டாபி ராம் கொம்மரெட்டி தெரிவித்துள்ளார். இவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்து, உடனடியாக விசாரணைக்கு ஏற்கும்படி வலியுறுத்த வாய்ப்புள்ளது.