இந்தியா

தீ வைப்பு        போராட்டம் 

போராட்டம் எதிரொலி- ராஞ்சியில் ஊரடங்கு: ஹவுரா பகுதியில் 144 தடை உத்தரவு

Published On 2022-06-10 21:44 GMT   |   Update On 2022-06-11 01:26 GMT
  • ஹவுரா மாவட்டத்தில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது.
  • இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நுபுர் சர்மாவை கைது செய்த கோரி மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபெரியா பகுதியில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளை வரவழைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, ஹவுரா மாவட்டத்தின் பன்ஹாரிஷ்பூர் உள்பட பதற்றம் நிறைந்த பகுதிகளில் வரும் 13ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பல்வேறு பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் 11 காவலர்களும், 12 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இதையடுத்து ராஞ்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை நடத்தினார்.

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும், உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News