திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்- 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
- திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
- பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஆக்டோபஸ் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 16 மணி நேரம் ஆனது.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் உள்ள சீலா தோரணம் வகை சுமார் 5 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், மற்றும் ஸ்ரீனிவாசன் மையங்களில் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற அலைமோதினர்.
இன்று காலையில் ஓரளவு கூட்டம் குறைந்தது. பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால், மறுநாள் அறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறை வழங்கும் மையங்கள் அருகில் உணவு சாப்பிட்டு அங்கேயே தூங்கினர்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 80,193 பேர் தரிசனம் செய்தனர். 33, 298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.