செய்திகள்
யோகி ஆதித்யநாத்

உலகளவில் சுற்றுலா தல நகரமாக அயோத்தி மாறும்: யோகி ஆதித்யநாத்

Published On 2021-11-05 01:53 GMT   |   Update On 2021-11-05 01:53 GMT
இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
அயோத்தி :

தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் மக்களின் பணத்தை கப்ரிஸ்தானுக்காக (கல்லறைகள்)செலவிட்டன. ஆனால், பா.ஜனதா அரசு மக்களின் பணத்தை கோவில்களின் மறுகட்டமைப்புக்காக செலவிடுகிறது. மதத்தின் மீதும் கலாசாரத்தின் மீது பற்றுள்ளவர்கள், இதை மக்கள் வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவார்கள்.

இங்கு மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகின்றன. ஏறக்குறைய 300 திட்டங்களின் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும்.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

30 ஆண்டுகளுக்கு முன் உங்களை எதிர்த்தவர்கள், இன்று உங்கள் முன், உங்கள் வலிமையின் முன் பணிந்துவிட்டார்கள். ராமர் ஒவ்வொருவரையும் ஒன்று சேர்ப்பார், இதுதான் ராமரின் சக்தி. 2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுமானம் முடிக்கப்படும், இதைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.

இந்த உலகின் முன் அயோத்தி நகரம் கலாசார நகரமாக மாறிவிட்டது, அடுத்துவரும் நாட்களில் இன்னும் வளர்ச்சித்திட்டங்கள் வரும். உலகளவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை இந்த நகரம் ஈர்க்கும். எனவே இது சுற்றுலா தல நகரமாக மாறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News