செய்திகள்
இந்தியாவின் ஒற்றுமையை அழிக்க பாஜகவை அனுமதிக்கக் கூடாது- பஞ்சாப் அமரீந்தர் சிங் பிரசாரம்
இந்தியாவின் ஒற்றமையை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரத்தின்போது பேசினார்.
சங்ரூர்:
பஞ்சாப் மாநிலம் சுனாம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் தில்லனை ஆதரித்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் மோடி என்னுடைய ராணுவம் என அழைக்க தொடங்கி விட்டார். ஆனால் ராணுவம் மோடிக்கு சொந்தமானது கிடையாது. இந்திய நாட்டுக்கு சொந்தமானது. நானும் இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தேன். நான் இந்திய தேசத்திற்காக பணியாற்றினேன், மோடிக்காக பணியாற்றவில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய வலிமையே, ஒற்றுமைதான். அதனை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது.
வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவோருக்கும், மதச்சார்பற்ற இந்தியாவை கட்டியெழுப்ப விரும்புவோருக்கும் இடையிலான போட்டியில், நாட்டின் எதிர்காலத்தை இந்த பாராளுமன்றத் தேர்தல் தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.