செய்திகள்

விரைவில் என்னை கைது செய்வார்கள்- சந்திரபாபு நாயுடு

Published On 2019-04-06 16:10 IST   |   Update On 2019-04-06 16:10:00 IST
இன்னும் ஓரிரு நாட்களில் தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #Loksabhaelection2019 #ChandrababuNaidu #PMModi
விசாகப்பட்டினம்:

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்றிரவு விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவரது தூண்டுதலின் பேரில்தான் ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பிரதமர் மோடி ஜனநாயகத்தை அவமதித்து கொண்டிருக்கிறார். மோடியின் பேச்சை கேட்டுக்கொண்டு, இப்போது ஆந்திர மாநில தலைமை செயலாளரையே தேர்தல் ஆணையம் வெளியேற்றிவிட்டது.

தேர்தல் ஆணையம் முதலில் கலெக்டர்களை மாற்றியது. பிறகு போலீஸ் அதிகாரிகளை மாற்றியது. இப்போது தலைமை செயலாளரையே மாற்றி விட்டார்கள். இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்னை குறி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் என்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். என்னை ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளனர். என்னை சிறையில் தள்ளினாலும் நான் பணிந்து விட மாட்டேன்.

கடந்த 40 ஆண்டுகளில் நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன். இந்த தடவை நிறைய முறைகேடு நடக்கிறது. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளனர்.

7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். #Loksabhaelection2019 #ChandrababuNaidu #PMModi
Tags:    

Similar News