செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் - காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா முப்தி போட்டி
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
ஜம்மு:
87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.
அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.
முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.
தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அங்கு பத்து மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat