செய்திகள்
ஆறாவது நாளாக எல்லைப்பகுதியில் பாக்.படைகள் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ஆறாவது நாளாக இன்றும் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanfires #PoonchLoC #IndianArmy
ஜம்மு:
நமது நாட்டின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட பூஞ்ச் மாவட்டம், மெண்டோர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று இரவு 7 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்தனர்.
தொடர்ந்து ஆறாவது நாளாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருவதால் எல்லைகோட்டுப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. #Pakistanfires #RajouriLoC #IndianArmy