செய்திகள்
கொல்கத்தா போலீஸ் கமிஷனரை 8 மணிநேரம் வறுத்தெடுத்த சிபிஐ - நாளையும் தொடரும் விசாரணை
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ 8 மணிநேரம் விசாரணை நடத்தியது. நாளையும் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MamataDharna #CBI #KolkataCommissioner
ஷில்லாங்:
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கமிஷனருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் பலர் வந்திருந்தனர்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நீடித்தது. பின்னர் இரவு 7.30 மணியளவில் கிளம்பிச் சென்றார். நாளையும் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடைபெறும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #MamataDharna #CBI #KolkataCommissioner