செய்திகள்

முதல் மந்திரி தர்ணா நடத்துவது வெட்கக்கேடு - மேற்கு வங்காளத்தில் யோகி ஆதித்யாநாத் பேச்சு

Published On 2019-02-05 13:34 GMT   |   Update On 2019-02-05 13:34 GMT
ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது வெட்கக்கேடான செயல் என்று மேற்கு வங்காளத்தில் இன்று பேசிய யோகி ஆதித்யாநாத் குறிப்பிட்டார். #Mamatasavingcorrupt #YogiAdityanath
கொல்கத்தா:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகின்றனர். அவ்வகையில், மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இதற்காக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புருலியா செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ நகர் வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா செல்ல முடிவு செய்தார் யோகி.

அதன்படி, இன்று பிற்பகல் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 3.40 மணியளவில் போகாரோ வந்தடைந்த அவர், அங்கிருந்து காரில் புருலியா சென்றார்.



புருலியாவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யாநாத், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கடுமையாக சாடினார்.

'லஞ்ச-ஊழல் மிகுந்த சட்டவிரோத ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவும், ஊழல்கள் தொடரவும் மம்தா பானர்ஜி போராட்டங்களை நடத்தி வருகிறார். ஊழலில் சிக்கியுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனரை காப்பாற்ற இப்போது அவர் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

ஊழல்கள் தொடர்பான ரகசியங்கள் வெளிப்படாத வகையில் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி தர்ணா நடத்துவது போன்ற வெட்கக்கேடான, அவமானகரமான, அரசியலமைப்புக்கு முரணான, ஜனநாயகவிரோதமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது’ எனவும் தனது பேச்சுக்கு இடையில் யோகி ஆதித்யாநாத் குறிப்பிட்டார். #Mamatasavingcorrupt #YogiAdityanath 
Tags:    

Similar News