மெக்சிகோவில் சோகம்: பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
- கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர்.
- அப்போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.