செய்திகள்

மோடிக்கு ஆதரவாக மத்தியபிரதேச பெண்கவர்னர் சர்ச்சை பேச்சு - பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2019-02-04 10:45 GMT   |   Update On 2019-02-04 11:31 GMT
பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பெண் கவர்னர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #AnandibenPatel
போபால்:

மத்தியபிரதேச மாநில கவர்னராக ஆனந்திபென் படேல் பதவி வகிக்கிறார். இவர் விந்தியா பகுதியில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது ரேவா மாவட்டத்தில் உள்ள குர்க் பகுதியில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சூரிய ஒளி மின்சார திட்டத்தில் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து வேலைவாய்ப்பு கேட்கும் இளைஞர்களின் பெயர்களை குறித்துக்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு கிராம மக்களை நோக்கி திரும்பிய ஆனந்திபென் படேல், ‘‘எதிர்காலத்தில் நீங்கள் இத்தகைய நல்ல திட்டங்களை பெற வேண்டும் என்றால் பிரதமர் மோடியை மறந்துவிடாதீர்கள் அவரை கவனத்தில் கொள்ளுங்கள்’’ என்றார். அப்போது அவருடன் பா.ஜனதா தலைவர்கள் ராஜேந்திர சுக்லா (சிவராஜ் சவுகான் அரசியல் மந்திரியாக இருந்தவர்) மற்றும் கே.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே அவரது இந்த சர்ச்சை பேச்சு 2.30 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக வெளியாகியது.

இதை பார்த்த காங்கிரசார் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அவர் அரசியல் சட்ட விதிகளுக்குட்பட்ட கவர்னர் பதவியில் இருக்கிறார் எனவே அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க கூடாது.

அவர் பா.ஜனதா ஊழியராக விரும்பினால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பாராளுமற தேர்தல் பொறுப்பாளர் ஷோபா ஓஜா தெரிவித்துள்ளார்.

ஷோபா ஓஜா

ஆனந்திபென் படேல் இத்தகைய சர்ச்சை கருத்தை பேசுவது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசும்போது மக்களிடம் ஓட்டு வாங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார். மக்களிடம் இருந்து ஓட்டுகளை பெற வீடு வீடாக சென்று குழந்தைகளை சந்திக்க வேண்டும். அதுவே ஓட்டுகளை பெறும் வழியாகும் என்றார்.

சட்டசபை தேர்தலின் போது நடைபெற்ற விழாவில் பேசிய அவர் விவசாய கடன் குறித்த கருத்துக்களை பா.ஜனதாவிற்கு ஆதரவாக வெளியிட்டார். அது அவரது உரையில் இடம் பெறாதவை. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதமர் ஆனதும் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஆனந்திபென் படேல் முதல்- மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnandibenPatel
Tags:    

Similar News