செய்திகள்

காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா

Published On 2019-01-19 01:42 GMT   |   Update On 2019-01-19 02:35 GMT
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி குழப்பத்திற்கு பா.ஜனதா பொறுப்பல்ல என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. எங்கள் கட்சியில் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். இதற்காக நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக தேவை இல்லாமல் எங்கள் கட்சி மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவது அவர்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் ஓடிவிட்டால், அவர்களை ஒற்றுமையாக வைத்துக்கொள்வது காங்கிரசின் பொறுப்பு. எங்கள் கட்சியின் 104 எம்.எல்.ஏ.க்களையும் ஒற்றுமையாக வைத்துக்கொள்வது எங்களின் பொறுப்பு ஆகும்.



பிற கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை இழுப்பது என்பது காங்கிரஸ் கலாசாரம் ஆகும். இது எங்களுடையது அல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒவ்வொருவராக வந்து கலந்துகொண்டுள்ளனர். செல்போனில் பேசி வரச்செய்தனர்.

அப்படி இருந்தும் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதன் மூலம் காங்கிரசில் ஒற்றுமை இல்லை என்பதும், கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு பா.ஜனதா பொறுப்பல்ல.

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி நிவாரண பணிகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை. மந்திரிகள் யாரும் சுற்றுப்பயணம் செய்யவில்லை. விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa
Tags:    

Similar News