செய்திகள்

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-01-18 08:05 GMT   |   Update On 2019-01-18 09:52 GMT
சபரிமலைக்கு சென்றதால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ள இரண்டு பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேரள காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
புதுடெல்லி:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.



பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர்கள் இருவருக்கும் 24 மணி நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டனர். #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
Tags:    

Similar News