செய்திகள்
லோக்பால் வலியுறுத்தி ஜனவரி 30ல் உண்ணாவிரதம் - பிரதமருக்கு அன்னா ஹசாரே கடிதம்
லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
மும்பை:
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.
இதற்கிடையே, லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.
அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பாலை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன்.
நீங்கள் நாட்டை ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்துக்கு கொண்டு செல்கிறீர்கள். காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.
நாட்டு மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறீர்கள். இதை கண்டித்து எனது கிராமமான ரலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike