செய்திகள்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடி ஊழல் - மோடி அரசு மீது காங்கிரஸ் பகீர் புகார்

Published On 2019-01-14 15:49 GMT   |   Update On 2019-01-14 15:49 GMT
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோடி தலைமையிலான மத்திய அரசில் ரூ.69 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். #2gspectrum #Congress #centralgovernment
புதுடெல்லி:

இந்தியாவில் ஆளும் பா.ஜ.க. அரசு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மட்டும் 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்திதொடர்பாளர் பவன் கேரா, மோடி அரசின் சமீபத்திய ஊழலை மத்திய கணக்குதணிக்கை குழு தோலுரித்துக் காட்டியிருப்பதாக தெரிவித்தார். 

2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 2012 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மீறும் வகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு 101 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த அரசு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதாகவும் இதன் மூலம் அரசுக்கு 560 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சமீபத்தில்  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



மேலும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றிருந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக கட்ட வேண்டிய தொகையான  45 ஆயிரம் கோடி ரூபாயை இந்த அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு தொகையை தன்னிச்சையாக மாற்றம் செய்து இதன் மூலமாக ரூ.23,821 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று தொகையையும் சேர்த்தால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாட்டுக்கு ரூ.69,381 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #2gspectrum #Congress #centralgovernment
Tags:    

Similar News