செய்திகள்

பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் நாளை வரை நீட்டிப்பு

Published On 2019-01-08 12:03 GMT   |   Update On 2019-01-08 12:03 GMT
இன்றுடன் முடிவடைவதாக இருந்த பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. #RajyaSabha #RajyaSabhaextended
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவை நேற்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும், ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


இன்று மீண்டும் மாநிலங்களவை தொடங்கியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரண்டாவது நாளாக அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றுடன் முடிவடைவதாக இருந்த பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாராளுமன்ற  வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #RajyaSabha #RajyaSabhaextended

Tags:    

Similar News