செய்திகள்
எதிர்க்கட்சிகள் அமளியால் இன்றும் மாநிலங்களவை ஒத்திவைப்பு
பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதால் பாராளுமனற மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என சில கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், மதியம் 2 மணிக்கு அவை தொடங்கியதும் மீண்டும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவை மதியம் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரண்டாவது நாளாக பாராளுமனற மாநிலங்களவை இன்றும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar