செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஊழலில் கிரிமினல் வழக்கு தொடருவோம் - ராகுல் காந்தி

Published On 2019-01-04 08:31 GMT   |   Update On 2019-01-04 09:29 GMT
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rafalescam #Congress #RahulGandhi
புதுடெல்லி:

ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சுமுகமாக நடத்த இயலாத நிலை நீடித்து வருகிறது.

இன்றைய மக்களவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பின்னர், பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



இந்த ஊழல் தொடர்பாக காங்கிரசின் கேள்விக்கு பதில் அளிக்க பயந்துகொண்டு பிரதமர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் தன்னை தனிப்பட்ட முறையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தரக்குறைவாக அவையில் பேசி வருவதற்கும் ராகுல் கண்டனம் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #Congress #RahulGandhi
Tags:    

Similar News