செய்திகள்

சபரிமலையை போர்க்களமாக்க இந்து அமைப்புகள் முயற்சி- கேரள முதல்வர் தாக்கு

Published On 2019-01-03 06:48 GMT   |   Update On 2019-01-03 06:48 GMT
சபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #KeralaCM #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில்,  சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, இதை நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்தார். மேலும், சபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


இதற்கிடையே அரசாங்கத்தின் நடவடிக்கையை பந்தளம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பிஜிஎஸ் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

“வழிபாடுகளுக்கு இடையூறு செய்வதற்காக யாரையாவது அனுப்ப தினமும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பண்டிகை காலம். இந்த காலத்தில் தினமும் 2 லட்சம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வருவார்கள். ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கையால் அது குறைந்துள்ளது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர்’’ என்றார் வர்மா. #Sabarimala #KeralaCM #PinarayiVijayan
Tags:    

Similar News