செய்திகள்

திருப்பதியில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல்

Published On 2018-12-29 05:08 GMT   |   Update On 2018-12-29 05:08 GMT
திருப்பதியில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமலை:

மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது 1½ வயது மகன் வீரேஷ். பிரசாந்த் ஜி ஜாதவ் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் ஜி ஜாதவ் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

திருமலையில் குழந்தை கடத்தல் சம்பங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தேவஸ்தானம் பல்வேறு இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளது. அதன்பின் சற்று குறைந்திருந்த குழந்தைக் கடத்தல் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

குழந்தையை கண்டு பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

திருப்பதியில் உள்ள நடைபாதை மார்க்கத்தில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அவ்வழியாக மர்மநபர் திருப்பதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திருப்பதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News